தொழிலிடம், மரியாதை மற்றும் ஈகோ எனும் விஷயங்கள் பெரும்பாலும் ஒருவரின் குணநலன்களையும், ஆளுமையையும் வெளிக்கொணரும். இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு சம்பவம் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதுகுறித்து தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்த ஒருவர், “என் முதலாளியை நான் ‘Sir ’ என அழைக்கவில்லை என்ற காரணத்தால் கோபமடைந்து என்னிடம் கடுமையாக பேசியுள்ளார்” என தெரிவித்துள்ளார். மேலும், “அவர் எனக்கு ஒரு செய்தி அனுப்பி, அலுவலகத்திலிருந்து வெளியேறுவதற்கு முன் வேலை சரிபார்க்கவில்லை என்றார்.
அதற்கு நான் ஏற்கனவே உங்களிடம் தெரிவித்தேன் என்று பதிலளித்தேன். இதைத்தொடர்ந்து எங்கள் இடையே தொழில்முறை உரையாடல் தொடங்கியது” என பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த நபர்,அந்த உரையாடலில் “நான் அவரை ‘சார்’ என அழைக்காமல், ‘MR’ என குறிப்பிட்டேன். இதனால், அவர் மிகுந்த கோபமடைந்து, எந்த ஜூனியரும் என்னை என் பெயரால் அழைக்கக் கூடாது எனக் கூறினார்.
ஆனால் நான் எல்லா நேரங்களிலும் அனைவரையும் மரியாதையுடன் நடத்துகிறேன். எனக்கு நன்கு தெரிந்தவர்கள் என்றால் அவர்கள் பெயரால் அழைக்கிறேன், தெரியாதவர்களுக்கு ‘ஐயா’ என்கிறேன். நான் யாரையும் மரியாதை குறைவாக நடத்தும் நோக்கத்தால் இப்படி அழைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் சமீப நாட்களில் இணையத்தில் பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. தற்போது மக்கள் இடையே சமத்துவக் கொள்கை அதிகம் வளர்ந்திருக்கும் நிலையில், உயர்நிலை அதிகாரிகளின் ஈகோ மனப்பான்மை மற்றும் மரியாதை எதிர்பார்ப்பு பற்றிய இந்த விவகாரம், வேலைவாய்ப்பு சூழலில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஒருவர் மற்றவரை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதிலும், அதற்கான எதிர்பார்ப்பும் உரிய வகையில் இருக்க வேண்டும் என்பதிலும் பலரும் ஒருமித்த கருத்தில் இருக்கின்றனர். இந்த சம்பவம் நிறுவனங்கள் மற்றும் மேலாளர்கள் தங்கள் ஈகோவை விலக்கி, ஊழியர்களை புரிந்துகொண்டு நடத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
