கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோழிநாயக்கன்பட்டி கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தெய்வா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இனியா(8), கோகுல கிருஷ்ணன்(4) என்ற இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் முதுகலை கணிதப் பட்டதாரியான தெய்வா அரசு பணி போட்டி தேர்வுகளுக்கு படித்து வந்துள்ளார்.

ஆனால் பல்வேறு போட்டி தேர்வுகளில் தெய்வா தொடர் தோல்விகளை சந்தித்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த தெய்வா தனது மாமனார் ஆறுமுகத்திடம் புலம்பி வந்ததாக தெரிகிறது. நேற்று மன உளைச்சலில் இருந்த தெய்வா அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தனது இரண்டு குழந்தைகளுக்கும் கரைத்து கொடுத்தார். இதனால் வாயில் நுரை தள்ளி குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து தெய்வா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தாய் மற்றும் குழந்தைகளின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.