சென்னை மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கம் பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அசோக் சைதன்யா(33) என்பவர் அறை எடுத்து தங்கி தனியார் கால் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இவர் தெலுங்கு திருமண தகவல் மையத்தில் மணமகள் தேவை என தனது விவரங்களை பதிவு செய்துள்ளார். அதனை பார்த்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஷரவண சந்தியா(33) என்ற பெண் நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என ஆசை வார்த்தைகள் கூறி தனது உண்மையான புகைப்படத்திற்கு பதிலாக சினிமா நடிகை போன்ற அழகான மாடலின் புகைப்படத்தை அசோக் சைதன்யாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில் மட்டும் இருவரும் வாட்ஸ் அப்பில் பேசி வந்தனர். தனது உண்மை முகம் தெரிந்து விடும் என்பதால் சந்தியா வீடியோ காலில் பேச மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் சந்தியா கேட்கும் போதெல்லாம் அசோக் அவருக்கு பணம் கொடுத்துள்ளார். இவ்வாறு இதுவரை 9 லட்சம் வரை பணம் அனுப்பியுள்ளார். மேலும் தான் உபயோகித்து வந்த 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனையும் சந்தியா கூறிய முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்வது குறித்து பேசும் போது சந்தியா மறுப்பு தெரிவித்ததால் அசோக் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

இதனால் சந்தியா அசோக்கின் செல்போன் எண்ணை பிளாக் செய்தார். இதுகுறித்து அசோக் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் கடந்த மூன்று மாதங்களாக சந்தியா கர்நாடக மாநிலத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி இருப்பதும், தெலுங்கு திருமண தகவல் மையம் மூலம் திருமணம் ஆகாத ஆண்களை குறி வைத்து அவர்களை ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதனால் சந்தியாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த சிம் கார்டுகள், 3 செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.