கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பநாயக்கன்பாளையத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். அந்த நிறுவனத்தில் ஜனா என்ற பெண்ணும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜனாவை தொடர்பு கொண்டு பேசிய ஒரு இளம்பெண் தான் வங்கியில் அடகு வைத்திருக்கும் 22 பவுன் தங்க நகையை மீட்க 43 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகவும், அந்த நகையை மீட்டு உங்களது நிறுவனத்தில் விற்பனை செய்து விடுகிறேன் எனவும் கூறினார்.

மேலும் தனது குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதால் தான் பணம் கேட்கிறேன் என அந்த இளம்பெண் கூறினார். இதனை நம்பி ஜனா 43,000 பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் அந்த இளம்பெண் ஜனாவை ஒரு வங்கிக்கு அழைத்து சென்றார். அங்கு பணத்தை வாங்கி கொண்ட உடன் இளம்பெண் திடீரென காணாமல் போய்விட்டார். அந்த இளம் பெண்ணை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுரேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.