ஐபிஎல் தொடரின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில், நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா 15 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

இதற்காகத் தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் நடந்த பாராட்டு விழாவில், மும்பை அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான கெய்ரன் பொல்லார்ட் செய்த குறும்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

ஒரு பெட்டியை ரோஹித் முன்னால் வைத்த பொல்லார்ட், “மும்பை அணியில் 15 ஆண்டுகளை முடித்துவிட்டாய், அதற்குப் பரிசாக 15 கோடி ரூபாயை இதில் போடு.. அதை நாங்கள் எல்லோரும் பகிர்ந்து கொள்கிறோம்” என்று ஜாலியாகக் கேட்க, ஒட்டுமொத்த டிரெஸ்ஸிங் ரூமுமே சிரிப்பில் மூழ்கியது.

2011-ல் சச்சின் டெண்டுல்கரின் பரிந்துரையின் பேரில் மும்பை அணியில் இணைந்த ரோஹித் சர்மா, 5 முறை கோப்பையை வென்று தந்து அந்த அணியின் அடையாளமாகவே மாறிவிட்டார்.

இந்த விழாவில் நெகிழ்ச்சியுடன் பேசிய ரோஹித், தனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், வீரர்கள் மற்றும் நிர்வாகத்திற்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். ரோஹித் மற்றும் பொல்லார்ட் இடையிலான இந்தத் நட்பு கலந்த கிண்டல் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.