கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் மைக்கேல் பிரின்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக இருக்கிறார். இவருக்கு ஸ்ரீ குமாரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த மைக்கேல் கடந்த ஆண்டு சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஸ்ரீகுமாரி தனது குழந்தைகளுடன் குதிரைபந்தி விளையில் இருக்கும் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

சம்பவம் நடைபெற்ற அன்று மைக்கேல் தனது மனைவியின் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு ஸ்ரீகுமாரி மறுப்பு தெரிவித்ததால் நீ குடும்பம் நடத்த வரவில்லை என்றால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் படுகாயமடைந்த மைக்கேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மைக்கேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.