உக்ரைனில் ஏறத்தாழ 20,000 இந்திய மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்.) பயின்று வந்தனர். அங்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ரஷியா போர் தொடுத்ததை அடுத்து  பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து இந்திய மாணவர்கள் அங்கு தங்களது மருத்துவ படிப்பைத் தொடர முடியாத நிலை உருவானது. அம்மாணவர்களை இந்தியாவுக்கு பாதுகாப்பாக திரும்ப அழைத்து வருவதே பெரும் சவாலாக இருந்தது.

ஒருவழியாக நாடு திரும்பிவிட்ட அந்த மாணவர்கள், தங்களது மருத்துவப் படிப்பை தொடர முடியாத சூழல் உருவானதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இந்நிலையில் உக்ரைன் துணை வெளியுறவு மந்திரியான எமின் தபரோவா இந்தியாவில் 3 நாள் பயணம் மேற்கொண்டார். அவர் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் (மேற்கு) சஞ்சய் வர்மாவை நேற்று முன்தினம் சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது உக்ரைனில் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் போன இந்திய மாணவர்கள் தங்களுடைய நாட்டில் ஒருங்கிணைந்த தகுதித்தேர்வை எழுதுவதற்கு உக்ரைன் அனுமதிக்கும் என தெரிவித்தார். இதனை மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் உக்ரைனில் மருத்துவம் பயின்றுவந்த 20,000 மருத்துவ மாணவர்களும் பலன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.