
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதற்காக எண்ணிய நிலையில் ஒரு நபரிடம் சுமார் 10 லட்சத்து, 87 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். அதனை பெற்றுக் கொண்ட அந்த நபர் மாயாண்டியை ஏமாற்றிவிட்டு தலைமறைவானார்.
இதனால் மாயாண்டி திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மோசடி செய்த கும்பலை தேடி வந்தனர். அதில் முக்கிய குற்றவாளியான ரெஜின் என்பவர் பல மாநிலங்களில் சென்று தலைமறைவாக இருந்து வந்த நிலையில் மும்பையில் வைத்து கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.
இதை தொடர்ந்து இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட பல குற்றவாளிகளையும் கைது செய்யுமாறு குற்றப்பிரிவு டிஎஸ்பி விஜயகுமார் மற்றும் புலனாய்வு அதிகாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி ஆகியோர் உத்தரவிட்டனர். அந்த உத்தரவின் படி இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உமா என்பவர் புதுடெல்லியில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சிலர் புது டெல்லிக்கு சென்று உமாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் வெளிநாட்டு வேலை மற்றும் அரசு, தனியார் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி மோசடி செய்யும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.