சென்னை பம்மலை பகுதியில் வசித்து வருபவர் முகமது ஈசாக்(40). இவருடைய நண்பர் மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த முன்வர் உசைன் ஆவார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து குறும்படம் எடுக்க காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவரிடம் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு சுமார் ரூ.80 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது. இதில் இதுவரை ரூ.30 லட்சம் மட்டும் முகமது ஈசாக் திருப்பி கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை கொடுக்க கால அவகாசம் கேட்டிருக்கின்றனர். எனினும் பாக்கியுள்ள ரூ.50 லட்சத்தையும் திருப்பித் தருமாறு செல்வம் நெருக்கடி கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பணத்தை திருப்பி செலுத்த கால அவகாசம் கேட்பதற்காக முகமது ஈசாக் மற்றும் முன்வர் உசைன் இருவரும் காஞ்சிபுரம் சென்றுள்ளனர். அப்போது கடன் கொடுத்த செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் கால அவகாசம் கேட்க வந்த முகமது ஈசாக் மற்றும் முன்வர் உசைன் ஆகிய 2 பேரையும் ஒரு வீட்டின் அறையில் அடைத்து வைத்து தாக்கியுள்ளனர். அதோடு அவர்களிடம் இருந்த ரூ.5 லட்சம் பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு அனுப்பியதாக தெரிகிறது.

இதுகுறித்து புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடன் கொடுத்த செல்வம், குட்டி என்ற சதீஷ், வல்லரசு, உதயகுமார், குமரன், ருஜினீஸ்வரன், தன்ராஜ் ஆகிய 7 பேரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கைதான செல்வம் புரட்சி பாரதம் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட ஒன்றிய செயலாளர் என்று சொல்லப்படுகிறது.