மத்தியப் பிரதேசத்தின் போபாலில் ஐந்தாவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் தத்யா டோப் நகர் ஸ்டேடியத்தில் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

தொடக்க நிகழ்வில் உரையாற்றிய அனுராக் தாக்கூர், நாட்டின் தொலைதூர மற்றும் கிராமப்புறங்களுக்கு விளையாட்டை எடுத்து செல்ல பிரதமர் மோடியின் அரசு எடுத்த நடவடிக்கைகளை விளக்கினார். 5 ஆண்டுகளுக்கு முன்பு, கேலோ இந்தியா விளையாட்டுக்காக ரூ.2700 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், தற்போது அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.500 கோடி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிகழ்வை நடத்த முன்வந்ததற்காக மத்தியப் பிரதேச அரசாங்கத்தைப் பாராட்டிய அவர், இந்த பதிப்பிலும் வீரர்கள் புதிய மைல்கற்களை அமைப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது, “கேலோ இந்தியா யூத் கேம்ஸ் மாநிலத்தில் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். மேலும் மாநிலத்தில் விளையாட்டு வீரர்களின் திறமையை மேம்படுத்துவதற்கும், புதிய விளையாட்டு திறமைகளை மேம்படுத்துவதற்கும் நிதி பற்றாக்குறை இருக்காது என்றும் வலியுறுத்தினார். மாநிலத்தில் 18 விளையாட்டுகளுக்கு 11 விளையாட்டு அகாடமிகள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார்.