டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளியாகிய ஆர்ஆர்ஆர் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ராஜமவுலியின் முந்தைய பாகுபலி திரைப்படத்தை விட இப்படம் வெளிநாட்டு ரசிகர்களாலும் ஹாலிவுட் பிரபலங்களாலும் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு சர்வதேச விருதுகளையும் வென்று ஆஸ்கர் ரேஸிலும் நுழைந்துள்ளது. அண்மையில் நடந்த ஹாலிவுட் கிரிட்டிக் விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற இப்படத்திற்கு 4 பிரிவுகளில் விருதுகள் கிடைத்தது.

இவ்விருது வழங்கும் நிகழ்வில் டைரக்டர் ராஜமவுலி, ராம்சரண், இசையமைப்பாளர் மரகதமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டாலும் படத்தின் மற்றொரு நாயகனான ஜூனியர் என்டிஆர் பங்கேற்கவில்லை. மேலும் எங்கும் ராம்சரணே முன்னிலைப்படுத்தப்பட்டதால் இப்படத்தின் வெற்றியை அவர் தனக்கு மட்டுமே சொந்தமாக்கி கொண்டதாக ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சை விருது வழங்கும் குழுவினரின் கவனத்திற்கு சென்றது. அதனை தொடர்ந்து அவர்கள் விளக்கமளிக்கும் வகையில் தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் கூறியதாவது, “ஜூனியர் என்டிஆருக்கும் இந்த விழாவில் பங்கேற்க நாங்கள் அழைப்பு அனுப்பி இருக்கிறோம். அவருக்காக ஒரு விருதும் வழங்கப்பட இருந்தது.

எனினும் அவர் தற்போது புது படம் ஒன்றில் நடித்து வருவதாலும், அண்மையில் அவரது சகோதரர் மரணம் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாகவும் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை என எங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. கூடிய விரைவில் அவர் இந்த விருதை எங்களிடம் நேரில் பெற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம்” என சொல்லி ரசிகர்களின் சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.