சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை ராஜலட்சுமி 8- வது குறுக்கு தெருவில் புவனேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கத்தில் இருக்கும் ஐ.டி கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வழக்கமாக மதியம் 3.30 மணிக்கு வேலைக்கு சென்று இரவு 1.30 மணிக்கு புவனேஷ் வீட்டிற்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் புவனேஷ் 12 மணிக்கு சிகரெட் பிடிப்பதற்காக பத்தாவது மாடியில் இருந்து தனது நண்பரான நாக வெங்கடாசாய் வேலை செய்யும் கீழ் தளத்திற்கு சென்றார். இருவரும் புகை பிடித்தவரை பேசிக் கொண்டிருந்தனர்.

இதனையடுத்து சிகரெட் புகைத்து விட்டு புவனேஷ் மேலே வேலை செய்யும் இடத்திற்கு சென்றார். சிறிது நேரத்தில் யாரோ கீழே விழும் சத்தம் கேட்டதால் பணியாளர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் புவனேஷ் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புவனேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் புவனேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த புவனேஷ் 10 லட்ச ரூபாய் வரை வங்கியில் கடன் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.