குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் சிறுவன் ஒருவனை சிகரெட் பாபா என அழைத்து மக்கள் வழிபாடு செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் சிறுவன் ஒருவன் கூட்டத்திற்கு நடுவே அமர்ந்து கொண்டு பொதுவெளியில் சிகரெட் பிடிப்பதும் அதன் புகையை வெளியே விடுவதுமாக உள்ளார்.

அங்கு கூடியிருக்கும் மக்கள் அந்த சிறுவனைத் தடுத்து நிறுத்தாமல் அவனது காலில் விழுந்து ஆசி பெறுவதும் அவர் மீது ரூபாய் நோட்டுகளை வாரி இறைப்பதுமாக உள்ளனர். மேலும் ஒரு நபர் அந்த சிறுவனின் கையில் மற்றொரு சிகரெட்டை பற்றவைத்து கொடுக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

 

சுமார் 14 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த காணொளி இணையவாசிகள் இடையே கடும் கோபத்தை கிளப்பியுள்ளது. இது ஆன்மீகம் அல்ல என்றும் மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம் என்றும் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

சிறுவனின் கையில் புத்தகம் இருக்க வேண்டிய வயதில் சிகரெட்டை கொடுத்து அவனது எதிர்காலத்தைச் சீரழிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குஜராத் மாநில காவல்துறை உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த சிறுவனை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.