பாகிஸ்தானை சேர்ந்தவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட சில பேர் மும்பை வழியே டெல்லி வருகின்றனர் என டெல்லி காவல்துறையினருக்கு சென்ற 14ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக ஆயுதபயிற்சி பெற சட்டவிரோதமாக எல்லை கடந்து பாகிஸ்தான் போக திட்டமிட்டு இருப்பதாகவும் அத்தகவலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து உஷாரான டெல்லி சிறப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் டெல்லி செங்கோட்டை பின்புறமுள்ள சுற்றுச்சாலையில் வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் தமிழகத்தை சேர்ந்த அப்துல்லா என்ற அப்துல் ரகுமான்(26), மராட்டிய மாநிலத்தை சேர்ந்த காலித் முபாரக் கான்(21) என தெரியவந்தது. பாகிஸ்தானில் இருப்பவர்களால் சமூகவலைதளம் வாயிலாக மூளைச்சலவை செய்யப்பட்ட இரண்டு பேரும் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

அதன்பின் பாகிஸ்தான் நபர்களின் வழிகாட்டலின் படி எல்லை கடந்து அந்நாட்டுக்கு சென்று ஆயுத பயிற்சி பெறவும் முடிவு செய்துள்ளனர் என டெல்லி காவல்துறையினர் கூறினர். அந்த 2 நபர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள், ஒரு கத்தி, கம்பியை துண்டிக்கும் கருவி போன்றவை கைப்பற்றப்பட்டது. கைதான 2 பேர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் ஏதேனும் பயங்கரவாத செயல்களை நடத்த திட்டமிட்டிருந்தனரா? என விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.