நேபாள அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் ஜெய்ஸ்வால் அதிரடியாக சதம் விளாசினார்.

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் கிரிக்கெட் காலிறுதிப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு வந்தன, அதே நேரத்தில் நேபாளம், ஹாங்காங் மற்றும் மலேசியா அணிகள் தகுதிப் போட்டிகள் மூலம்  காலிறுதி சுற்றுக்கு வந்தன. இந்நிலையில் சீனாவின் ஹாங்சோ மைதானத்தில் இன்று முதல் காலிறுதியில் நேபாளம் மற்றும் இந்தியா மோதியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் முதலில் பேட்டிங் ஆடுவதாக தெரிவித்தார். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். இதில் ருதுராஜ் பொறுமையாக தொடங்கிய நிலையில், ஜெய்ஸ்வால் அதிரடியாக சிக்ஸர், பவுண்டரி என அடித்து மிரட்டினார். ஜெய்ஸ்வால் 22 பந்துகளில் அரை சதம் அடித்தார். இந்திய அணி 9.1  ஓவரில் 100 ரன்களை கடந்தது.

அதன் பிறகு தீபேந்திர சிங் ஐரியின் 10வது ஓவரில் ருதுராஜ் 23 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து  12வது ஓவரில் திலக் வர்மா 10 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து போல்ட் ஆகி வெளியேறினார்.
இதையடுத்து 13வது ஓவரில் ஜிதேஷ் சர்மா 5 ரன்னில் வெளியேறினார்.

சிறிய மைதானமாக இருந்தாலும் இந்திய தொடக்க பேட்டர்கள்  அடுத்தடுத்து வெளியேறினர். இருப்பினும் ஜெய்ஸ்வால் மறுமுனையில் அதிரடியாக ஆடினார். இதையடுத்து சிவம் துபே மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் கைகோர்த்தனர். ஜெய்ஸ்வால் அதிரடியாக 48 பந்துகளில் (8 பவுண்டரி, 7 சிக்ஸர்) சதம் அடித்தார். அதன்பின் அவர் 17வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 100 ரன்களுக்கு அவுட் ஆனார். இந்திய அணி 16 ஓவர்களில் 150 ரன்களை கடந்து ஆடி வருகிறது. தொடர்ந்து துபே மற்றும் ரிங்கு சிங் ஆடிவருகின்றனர்.