கேரளாவில் நடைபெற்ற சாலை விபத்தில் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற ஒரு நபர் உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, பஸ் டிரைவர் குடித்துவிட்டு கவனம் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த பஸ் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இது போன்ற சட்டத்திற்கு புறம்பாக வாகனம் ஓட்டும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கொச்சி போலீஸ் அறிவித்துள்ளனர். அந்த வகையில் திரிபுனித்துரா காவல் நிலைய போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய பேருந்து மற்றும் வேன் ஓட்டுனர்கள் அதிரடியாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று அங்கு பேனாவும், பேப்பரும் கொடுத்து தரையில் அமர செய்து இனி நான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி செல்ல மாட்டேன் என எழுதும்படி நூதன தண்டனை கொடுத்துள்ளனர். அதுவும் ஓரிரு முறை அல்ல. ஓர் ஆயிரம் முறை இது போல் எழுத வேண்டும் என கூறியுள்ளனர். அந்த வகையில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் 12 பேர்,  கேரளா அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர்கள் 2 பேர் மற்றும் பள்ளி வாகன ஓட்டுனர்கள் இரண்டு பேருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.