மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி மாவட்டம் சின்சகாரி பகுதியில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தப் போட்டியானது இணையதளங்களில் நேரடி ஒளிபரப்பு (Live Broadcast) செய்யப்பட்டு வந்தது.

ரத்தினகிரி பகுதியில் பிரபலமான கிரிக்கெட் வீரராக அறியப்பட்டவர் பிரவீன் பவார். உள்ளூர் கிரிக்கெட் வட்டாரத்தில் இவருக்குப் பெரிய பெயர் உண்டு.

போட்டியின் போது பிரவீன் மிகவும் சாதாரணமாகவே காணப்பட்டார். அவர் அம்பயர் அருகே நின்றுகொண்டிருந்தபோது, திடீரென கண் இமைக்கும் நேரத்தில் அப்படியே தரையில் சரிந்து விழுந்தார்.

முதலில் அவர் தலைசுற்றி விழுந்ததாகவே அங்கிருந்தவர்கள் நினைத்தனர். உடனே சக வீரர்களும், நடுவர்களும் ஓடிச் சென்று முதலுதவி செய்ய முயன்றனர்.

அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பரிசோதனையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.