
திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் நகர் பகுதியில் வசித்து வரும் எழில்இசை (28) என்பவர் அப்பகுதியில் கராத்தே பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகேவுள்ள பள்ளி மாணவி ஒருவர் சமீபத்தில் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். இந்நிலையில் எழில் இசை அந்த மாணவியை காதல் வலையில் சிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதனால் மாணவி கர்ப்பமடைந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சோர்வாக காணப்பட்டார்.
உடல்நல குறைவின் காரணமாக மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்கள். இந்த தகவலை உடனடியாக மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தெரிவித்தனர். அதன்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் மாணவியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது சரிவர தெரியவில்லை.
அந்த சமயத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தையின் டிஎன்ஏ வை வைத்து விசாரணை நடத்திய போது கராத்தே பயிற்சியாளர் எழில்இசை மாணவியை பலாத்காரம் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து எழில்இசையை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது போக்சோ உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.