சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு கான பொது தேர்வு கடந்த 15 -ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் இந்த தேர்வை சுமார் 38 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். இந்நிலையில் இடைநிலை கல்வி வாரியம், பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகளை பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ தலைவர் நிதி சிப்பெர் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நடப்பாண்டு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளை எந்த வித தவறுகளும் நடைபெறாமல் நடத்தி முடிக்க வேண்டும்.

மேலும் விடைத்தாள்களையும் சரியான முறையில், நேரத்தில் மதிப்பீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது விடைத்தாள்களை திருத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது நடப்பாண்டு பத்தாம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் விடைத்தாள் மதிப்பீட்டின் தரத்தை உயர்த்துவதற்காக முதுநிலை ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். இந்த விடைத்தாள் திருத்தும் பணி மொத்தம் 12 நாட்கள் நடைபெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் அதற்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு ஆசிரியரும் தலா 20 முதல் 25 விடைத்தாள்களை திருத்தி முடிக்க வேண்டும். அதனால் விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்புடன் பங்கேற்க வேண்டும். மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை தவறாமல் அனுப்ப வேண்டும். இதற்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து மற்றும் அபராதம், சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.