ஈரோடு மாவட்டத்தில் உள்ள முரளி பிரிவு தாளக்கரை தென் பர்கூர் காப்புகாட்டில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பெண் யானையும், அதன் அருகே குட்டி யானையும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு சென்று யானை மற்றும் குட்டியின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, தாய் யானையுடன் குட்டி நடந்து வந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக 2 யானைகளும் பள்ளத்தில் கால் தவறி உருண்டு விழுந்ததால் இறந்திருக்கலாம் என கூறியுள்ளனர். 2 யானைகளின் உடல்களும் மற்ற விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்பட்டது.