கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பேப்பையா-கீதா தேவயான் தம்பதியினர் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று கணவன், மனைவி இருவரும் தங்களது மகன் ஆகாஷுடன் அருகில் இருக்கும் நீரோடை பகுதிக்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு ஆகாஷ் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தேயிலைத் தோட்ட பகுதியில் இருந்து திடீரென வந்த சிறுத்தை ஆகாஷ் மீது பாய்ந்து தாக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பேப்பையா கூச்சலிட்டு கற்களை வீசி சிறுத்தையை துரத்தியுள்ளார். இதனால் சிறுவனை விட்டுவிட்டு சிறுத்தை தேயிலை தோட்டத்திற்குள் ஓடி மறைந்தது. இதனையடுத்த படுகாயமடைந்த ஆகாஷ் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.