கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. அந்த விமான நிலையம் அரபிக் கடலோரத்தில் பீமா பள்ளி முதல் சங்கு முகம் வரையிலுள்ள மீனவ கிராம பகுதியில் அமைந்துள்ளது.

அதனால் அப்பகுதிகள் வழியாக பல்வேறு பறவைகள் மீன்களை தேடி வருகின்றன. அந்த பகுதியில் சுற்றி திரியும் பறவைகளால் விமானங்கள் புறப்படும் போதும் விமானங்கள் இறங்கும் போதும் தினமும் அச்சுறுத்தலாக உள்ளது. ஏற்கனவே கடந்த ஓராண்டில் 10 விமானங்களுக்கு மேல் பறவைகளால் சேதம் அடைந்துள்ளது என கூறப்படுகிறது.

அதனால் பறவைகளின் அச்சுறுத்தலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக விமான நிலையங்களின் நான்கு பகுதிகளிலும் தினந்தோறும் 100 ராக்கெட் பட்டாசுகளும், 400 முதல் 500 குண்டு பட்டாசுகளும் வெடிக்கப்படுகிறது.

அந்த பட்டாசுகளை வெடிப்பதற்காகவே 30 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு மட்டும் பட்டாசுகள் வெடிக்க ரூபாய் 3,30,000 செலவாவதாக கூறப்படுகிறது.

மேலும் ஆண்டுக்கு சராசரியாக ரூபாய் 12 கோடி பட்டாசுகள் வெடிப்பதற்கு மட்டுமே திருவனந்தபுரம் விமான நிலையம் செலவிடுகிறது. அதில் பட்டாசு வெடி க்க நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு மாத சம்பளம் ரூபாய் 24 ஆயிரம். சம்பள தொகையை மட்டும் கணக்கிட்டால் மாதம் தோறும் ரூபாய் 7,20,000 செலவு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.