சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை மார்க்கெட் ராதா நகரில் ரமேஷ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு ரமேஷ் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை திடீரென கடையிலிருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்வெர்ட்டர் மின்சார வயரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.