கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி பகுதியில் உதய மார்த்தாண்டம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பாலிசி எடுத்துள்ளார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது மகனை உதய மார்த்தாண்டம் நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அந்த சிகிச்சைக்காக 10,757 ரூபாய் செலுத்தியுள்ளார். இந்நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் பணத்தை தருமாறு உதய மார்த்தாண்டம் கேட்டுள்ளார்.

அப்போது சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் கொடுக்கவில்லை. இதுகுறித்து வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் உதய மார்த்தாண்டம் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி சிகிச்சைக்காக செலவழித்த ரூ.10,757 நஷ்டஈடு 15 ஆயிரம், வழக்கு செலவு தொகை 5 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.