
உத்தரப்பிரதேசம், பிரயாக்ராஜ் ஜல்வா பகுதியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம் (IIIT) அலஹாபாத்தில், தெலுங்கானாவைச் சேர்ந்த ராகுல் மாதலா சைதன்யா (21) என்ற மாணவர், ஹாஸ்டல் கட்டடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். கடந்த சனிக்கிழமை இரவு 11.55 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ராகுல் ஒரு தேர்வில் தோல்வியடைந்ததை தொடர்ந்து கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததை உறுதி செய்தனர். சம்பவத்தன்று இரவு, அவர் தனது தாயாரான ஸ்வர்ணலதாவுக்கு, “அப்பாவையும், தம்பியையும் கவனமாக பாத்துக்கொள்” என்று மெசேஜ் அனுப்பியதும், பதற்றமடைந்த அவர் அழைத்தபோது, ராகுலின் செல்போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது.
பின்னர் நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தியதும், அவர் ஹாஸ்டலுக்கு சென்று பார்த்த பொது ராகுல் கீழே விழுந்த நிலையில் கிடந்தார். ராகுல் கடந்த 6 மாதங்களாக வகுப்புகளை தவிர்த்து வந்ததாகக் கூறியுள்ள கல்வி நிறுவனம், இதுபற்றி குடும்பத்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காதது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு JEE Mains தேர்வில் EWS பிரிவில் அகில இந்திய தரவரிசையில் 52வது இடம் பிடித்த ராகுல், வீடியோகால் மூலம் அடிக்கடி தாயுடன் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார். தற்கொலைக்குக் காரணம் குறித்து மாணவர்கள் நியாயம் கோரி ஞாயிற்றுக்கிழமை ஹாஸ்டல் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.