குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உமர்காம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் சஞ்சான் எனும் கிராமம் இருக்கிறது. போர்ச்சுகீசியர்களின் காலனி ஆட்சி பகுதிக்கு அருகில் அமைந்த இந்த கிராமத்தில் வாலி அகமது அச்சு என்பவரின் பண்ணை இருக்கிறது. அதில் மிக பழமைவாய்ந்த மாமரம் ஒன்று இருக்கிறது.

1,300 வருடங்களுக்கு முன் பார்சி இன மக்கள் இப்பகுதியில் வந்து குடியேறினர். அவர்களால் இந்த மாமரம் நடப்பட்டிருக்கும் என உள்ளூர்வாசிகள் சொல்கின்றனர். இந்த மரத்தில் புது தண்டு வளர்ந்ததும், அதிலிருந்து தரைக்கு இணையாக கிளைகள் வளர துவங்கும். மேலும் புது வேர்களும் இதே முறையில் வளர்கிறது என கிராம வாசிகள் கூறுகின்றனர்.

அதன்படி 2 நூற்றாண்டுகளில் இந்த மரம் 200 மீட்டர் தொலைவுக்கு நகர்ந்து சென்று இருக்கிறது. இந்த மாமரம் குஜராத்தின் 50 பாரம்பரிய மரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை பார்க்க நாடு முழுவதும் இருந்து மக்கள் பயணம் மேற்கொண்டு வந்து செல்கின்றனர். மேலும் உள்ளூர்வாசிகள், பழங்குடியினர் இம்மரத்திற்கு சடங்குகளும், பூஜைகளும் செய்து வருகின்றனர்.