
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் ராஜ்கிரன். இவரது புகைப்படத்தை காட்டி மோசடி செய்ய முயற்சி செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் ஒரு நடிகன் என்பதால் என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக இன்று சிலரும், திரைப்படத்தை இயக்குவதற்காக சிலரும், என் அபிமானிகள் என்றும், என் தீவிர ரசிகர்கள் என்று பலரும் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இது ஒரு சாதாரண விஷயம். இப்படி எடுக்கப்படும் புகைப்படங்களை வைத்துக் கொண்டு என் சொந்தக்காரர்கள் என்றோ, எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றோ கூறிக்கொண்டு யார் என்ன காரணத்திற்காக உங்களை அணுகினாலும் அவர்களிடம் மிகவும் கவனமாக இருங்கள்.
‘கனடா செல்வம்’ என்ற ஒருவர் என்னை வைத்து படம் தயாரிக்க உள்ளதாக கூறி ஒரு சிபாரிசு மூலம் என்னிடம் வந்து பேசி, என்னோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றார். அதன் பிறகு என்னை சந்திக்கவும் இல்லை, எந்த படமும் எடுக்கவில்லை. இது நடந்து 7, 8 வருடமாகிறது. அதே நபர் சமீபத்தில் தளபதி என்ற தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் என்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காட்டி, தன் பெயரை ஸ்டாலின் என்று கூறி ஏதோ ஒரு வகையில் தளபதியிடம் மோசடி செய்ய முயன்றதாக என்னுடைய காதுக்கு செய்திகள் வருகிறது. என்னிடம் யாருடைய சிபாரிசும் எடுபடாது, என் விஷயங்களை நான் மட்டுமே முடிவெடுக்கின்றேன். என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு கதைகள் பல சொல்லி யாரும் யாரையும் ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவு என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.