திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் சாஸ்திரி தெருவில் டாக்டரான திலீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருவத்தில் கிளினிக் நடத்தி வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் திலீப் வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஒரு வார கால பயிற்சிக்காக சென்றுள்ளார். கடந்த 28-ஆம் தேதி பயிற்சி முடித்துவிட்டு அறைக்கு சென்ற திலீப் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் மருத்துவமனைக்கு வரவில்லை.

இதனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது பேச்சு மூச்சு இல்லாமல் திலீப் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். அங்கு திலீப்பை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாரடைப்பால் திலீப் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.