தீபாவளி என்றாலே பட்டாசும், பலகாரமும் தான் ஞாபகம் வரும். தீபாவளி தினத்தில் விதவிதமான பலகாரங்களை செய்து சாமிக்கு படைத்து புது ஆடைகளை உடுத்தி பட்டாசு வெடிப்பார்கள். தீபாவளி பலகாரம் தட்டை செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு-2 கப்
உளுத்தம் பருப்பு மாவு-2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள்- தேவையான அளவு
கடலைப்பருப்பு- 2 டேபிள் ஸ்பூன் (ஊறவைத்தது)
கறிவேப்பிலை-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
வெண்ணெய்-2 டீஸ்பூன்
எண்ணெய்-பொறிக்க தேவையான அளவு.

முதலில் ஒரு மணி நேரம் கடலைப்பருப்பை ஊறவைத்து கழுவி காய போட வேண்டும். இதனையடுத்து கடாயில் அரிசி மாவு, உளுத்தம் பருப்பு, மிளகாய் தூள், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய் போட்டு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைய வேண்டும். பின்னர் ஒரு பிளாஸ்டிக் சீட்டில் எண்ணெய் தடவி சிறிய எலுமிச்சம் அளவு மாவை எடுத்து அதில் தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். இதனையடுத்து கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் தட்டி வைத்துள்ள தட்டையை போட்டு பொன்னிறமாக இரண்டு பக்கமும் பொரித்து எடுத்தால் சுவையான தட்டை ரெடி.