தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் மணிரத்தினம், எச். வினோத், மகேஷ் நாராயணன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக ராஜமவுலி மற்றும் கமல்ஹாசன் சமீபத்தில் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான ஒரு புகைப்படம் கூட அண்மையில் வெளியாகி வைரலானது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் ராஜமவுலி அடுத்ததாக மகேஷ்பாபுவுடன் இணைந்து ஒரு புதிய படத்தை இயக்கும் நிலையில், அப்படம் 4 பாகங்களாக உருவாக உள்ளதாக ராஜமவுலியின் தந்தை கூறி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.