குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பாக்கெட்டிற்குள், பூஞ்சை காளான் மற்றும் புழுக்கள் போன்ற பூச்சிகள் இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியையும், உணவுப் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது போப்கேல் பகுதியைச் சேர்ந்த மகேந்திர ருஷி பிங்கார்டிவ் என்பவர்  உள்ளூர் கடையில் வாங்கிய ‘சன்பீஸ்ட் இப்பீ!’ (Sunfeast YiPPee!) நூடுல்ஸ் பாக்கெட்டிலேயே இந்த அவலநிலை இருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து மகேந்திர ருஷி, மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புப் போர்ட்டலில் அதிகாரப்பூர்வமாகப் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் தனது புகாரில், “நன்றாக மூடப்பட்டிருந்த அந்த நூடுல்ஸ் பாக்கெட்டைத் திறந்தபோது, அதற்குள் கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் பூஞ்சை காளான் போன்ற ஒரு அடுக்கு படர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். மேலும், அந்த நூடுல்ஸ் பாக்கெட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ந்தத் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள அசுத்தத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, சம்பந்தப்பட்ட பேட்ச் எண், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவற்றை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

நுகர்வோர் அளித்த இந்தப் புகார், போர்ட்டல் வழியாகச் சம்பந்தப்பட்ட உணவு வணிக நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் தயாரிப்புக் குறைபாடு உற்பத்தி ஆலையில் ஏற்பட்டதா, அல்லது பேக்கிங் சேதமடைந்ததால் வந்ததா, அல்லது முறையற்ற சேமிப்புக் கிடங்கு பராமரிப்பால் நேர்ந்ததா என்பது முறையான ஆய்வுக்குப் பிறகே தெரியவரும். இது குறித்து விளக்கம் கோரி ஐடிசி  நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவர்களது அதிகாரப்பூர்வ பதில் கிடைத்தவுடன் அடுத்தகட்ட விவரங்கள் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.