பிரபல யூட்யூப்பர் டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலானது முடிவடைந்த நிலையில் மீண்டும் 15 நாட்கள் நீதிமன்ற கவலை நீட்டிப்பு செய்துள்ளது.

காஞ்சிபுரம் அருகே பிரபல யூட்யூப்பர் டிடிஎஃப் வாசன் பைக்கில் அதிக வேகமாக சென்று சாகசத்தில் ஈடுபடும் போது தவறி விழுந்து விபத்துக்குள்ளானார். இதனால் அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு,  அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஏற்கனவே அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்த நிலையில் இன்று நீதிமன்ற காவல் முடிவடையும் தருவாயில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் டிடிஎப் வாசன் காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மேலும் பதினைந்து நாள் நீதிமன்ற காவலை நீடித்து  காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றம் உத்தரவு வழங்கி உள்ளது.

அதிவேகமாக வாகனத்தை இயக்குவது,  நெடுஞ்சாலைகளில் சாகசம் முயற்சிப்பது, அதிக ஆட்களை கூட்டுவது என ஏற்கனவே அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவருக்கு ஜாமீன் கோரி இரண்டு முறை ஜாமீன் மனு போடப்பட்டிருந்தது. இருமுறை நீதிபதி கருணாகரன் ஜாமீன் கொடுக்கவில்லை. இருந்தபோதும் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவானது இன்று போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.