கடலூர் மாவட்டத்தில் உள்ள தோப்புக்கொல்லை தெற்கு தெருவில் ராமகிருஷ்ணன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அருள் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி(32) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிணி(8), ஹேமலதா(6) என்ற இரண்டு மகள்களும், குமுதன்(5) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் அருள் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது அருளின் தாய் தமிழேந்தி இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார். பின்னர் நேற்று காலை 5 மணிக்கு கண்விழித்த அருள் மீண்டும் தனது மனைவியுடன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார்.

இதனால் தமிழேந்தி தனது பேர குழந்தைகளை அருகில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதற்கிடையே முத்துலட்சுமி தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அருள் கேனை பிடுங்கி தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டதால் இருவர் மீதும் தீ பற்றி எரிந்தது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.