அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோவில் குளத்தில் சுபான் ரங்ரீஸ் என்ற இஸ்லாமிய இளைஞர் அமர்ந்து நீர் அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொற்கோவிலின் புனிதமான குளத்தில் அமர்ந்து கைகளால் தண்ணீரை அள்ளி அவர் செய்த செயல் சீக்கிய மத மரபுகளை மீறுவதாக அமைந்ததாகப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

 

இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து அந்த இளைஞர் மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் நீண்ட நாட்களாகப் பொற்கோவிலுக்குச் செல்ல விரும்பியதாகவும் ஆனால் அங்குள்ள மத வழிமுறைகள் தனக்குத் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். தான் இஸ்லாமிய முறைப்படி வுசு செய்வதாக நினைத்துச் செய்ததாகவும் சீக்கியர்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதனிடையே இந்தச் சம்பவம் குறித்துச் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும் அப்போது பணியில் இருந்த ஊழியர்களின் கவனக்குறைவு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குழுவின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.