தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 19 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் மாணவியின் தாய் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் எனது மகளுடன் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த இளம்பெண் தோழியாக பழகினார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் எனது மகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆணாக மாறி எனது மகளை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி எனது மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.