கேரள மாநிலத்தின் அழிக்கல் கடற்கரையிலிருந்து சுமார் 44 கடல் மைல் தொலைவில், சீனாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் MV Wan Hai 503 திடீரென வெடித்து தீப்பற்றி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் விரைவு நடவடிக்கையால் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

ஜூன் 9ஆம் தேதி, கொழும்பிலிருந்து மும்பையின் நவா ஷேவா துறைமுகத்தை நோக்கிச் சென்ற இந்த கப்பலில், மொத்தம் 22 பணியாளர்கள் பயணித்தனர். இவர்களில் 14 பேர் சீனா நாட்டவர்கள், 6 பேர் தைவான் நாட்டவர்கள் எனத் தெரிகிறது. கப்பல் திடீரென தளத்திற்குக் கீழ் பெரிய அளவில் வெடித்ததுடன், பின்னர் தீப்பற்றியது. இந்த விபத்தில் 4 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு உடனடி மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

விபத்து ஏற்பட்ட உடனே, இந்திய கடலோர காவல்படை, ICGS ராஜ்தூத், ICGS அர்னவேஷ் மற்றும் ICGS சச்செட் ஆகியவற்றை அனுப்பி மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு, தீயணைப்பு மற்றும் குளிரூட்டல் பணிக்காக ICGS சமுத்திர பிரஹாரி மற்றும் ICGS சமர்த் ஆகியனவும் சேர்க்கப்பட்டன. கடலோர காவல்படை விமானம் மூலம் வான்வழி ஆய்வு செய்யப்பட்டு, அவசர உதவிப் பொருட்கள் இறக்கப்பட்டன.

கப்பலின் தற்போதைய நிலை:
கப்பலின் மையப் பகுதி மற்றும் தங்குமிடத் தொகுதி அருகே தீ விபத்துகள்

முன்புற கொள்கலன் பகுதிகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன

கப்பல் இடதுபுறமாக 10–15 டிகிரி சாய்ந்துள்ளது

சில கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளன

கரும்புகை இன்னும் எழுந்துகொண்டிருக்கிறது

கடலில் மாசு பரவும் அபாயம் இருந்தும் அதை கண்காணித்து வருகின்றனர்

இந்தியாவின் மீட்பு நடவடிக்கையை தொடர்ந்து, சீன அரசு அதிகாரப்பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள சீனத் தூதரக செய்தித் தொடர்பாளர் யூ ஜிங், “இந்திய கடற்படையும், மும்பை கடலோர காவல்படையும் எடுத்த விரைவு மற்றும் தொழில்முறை நடவடிக்கைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்கள்,” என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “தேடல் நடவடிக்கை வெற்றிகரமாக முடியும் என்றும், காயமடைந்த பணியாளர்கள் விரைவில் குணமடைவார்கள் என்றும் நம்புகிறோம்,” எனக் கூறியுள்ளார்.