
ஹைதராபாத்தில் உள்ள மாசா டேங்க் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அஜய் குமார். இவருக்கு அர்னவ்(6) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது தாத்தாவுடன் லிப்டில் செல்லும் போது திடீரென லிஃப்ட் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் லிஃப்ட் கதவு திறந்தவுடன் சிறுவன் கடந்து செல்ல முயன்ற போது லிப்ட் திடீரென நகர்ந்ததால் கதவுக்கும் சுகருக்கும் இடையிலான இடைவெளியில் சிறுவன் தவறி விழுந்து முதல் தளத்திற்கு இடையே மாட்டியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் ஹைதராபாத் பேரிடர் மீட்பு குழு விரைவாக வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சிறுவன் லிப்ட் இல் சிக்கி உள்ளார். பின்னர் எரிவாயு கட்டர்களை பயன்படுத்தி வீரர்கள் லிப்டின் சட்டத்தை வெட்டி சிறுவனை மீட்டனர். அதன் பின்னர் சிறுவன் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுவன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக லிப்டில் சிக்கியதால் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். லிப்டில் போதிய பராமரிப்பு இல்லாததால் உள் கதவு சரியாக மூடப்படாமல் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.