சென்னையில் உள்ள காசிமேடு சூரிய நாராயணன் சாலையில் ஆதி திராவிடர் ஆராய்ச்சி மற்றும் முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கான விடுதி ஒன்று உள்ளது. இங்கு சுமார் 180 மாணவர்கள் தங்கி படித்து வரும் நிலையில், இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர் பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும், மேலும் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என மாணவர்கள் புகார் அளித்தனர். மேலும் இது தொடர்பாக பலமுறை நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய போது, இது குறித்து தகவலறிந்த ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி, சப்-கலெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் அங்கு வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களின் கோரிக்கைகளை ஓரிரு நாட்களில் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர். இதன் பிறகு மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.