தமிழகத்தின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டெல்லி நிருபரிடம் ஆங்கிலத்தில் உரையாடியது போன்ற ஒரு ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவில் அமைச்சர் பிடிஆர் முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஒரே வருடத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர் என்றும், இந்த பிரச்சனையில் இருந்து மாட்டிக்கொள்ளாமல் எப்படி தப்பிப்பது என்றும் பேசுவது போன்று உள்ளது. இந்த ஆடியோவுக்கு இதுவரை திமுக சார்பில் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோர் 30,000 கோடி ரூபாயை முறைகேடாக சம்பாதித்துள்ளதாக பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. நாங்கள் வெளியிட்ட டிஎம்கே பைல்ஸ் என்பதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைச்சர் பிடிஆர் ஆடியோ அமைந்துள்ளது. இந்த ஆடியோவுக்கு இதுவரை திமுக அரசு எந்த விளக்கமும் கொடுக்காமல் இருப்பது வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும். இதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும். ஊழலில் கொழிக்கும் தன்னுடைய குடும்பத்தாரின் இந்த செயலுக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று மக்களுக்கு பதில் அளிப்பதோடு தகுந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என தமிழக பாஜக கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.