இந்தியாவையே உலுக்கிய பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஒன்றிய அரசின் இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து 58 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கின் விசாரணையில் ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் அட்டனி  ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி மற்றும் மனுதாரர்கள் தரப்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பா.சிதம்பரம், மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் உள்ளிட்டோர் வாதங்களை முன்வைத்தனர்.

உரிய திட்டமிடல் ஏதும் இன்றி ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டும் பண மதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்டதா? பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. தேசத்தை கட்டமைக்கும் பணியில் தற்காலிக சிரமத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டுமென ரிசர்வ் வங்கி தரப்பில் வாதிடப்பட்டது.

வரி ஏய்ப்பு,  கருப்பு பணம், தீவிரவாதத்திற்கு நிதியளித்தல், கள்ள நோட்டு போன்றவற்றிற்கு எதிரான தொலைநோக்குப் பார்வையுடைய திட்டமே பணமதிப்பு நீக்க நடவடிக்கை என ஒன்றிய அரசின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், பணமதிப்பு நீக்கம் குறித்த தீர்ப்பு இன்று வழங்கப்பட இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் குளிர்கால விடுமுறை முடிந்த பிறகு முதல் வழக்காக நீதிபதிகள், எஸ்.ஏ.நசீர்,  பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபன்னா, வி. ராமசுப்பிரமணியன், பி.வி. நாகரத்னா அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.இதில் மத்திய அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை சரியே என தீர்ப்பில் கூறிய நீதிபதிகள், இதற்கு எதிராக தொடர்ந்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.