மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று கூறியிருந்தார். அதாவது கடந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்த நிலையில் அவர்கள் ஜெயிக்க கூடாது என்பதற்காக திமுகவுடன் கூட்டணி அமைத்ததோடு குறைந்த தொகுதிக்கும் நாங்கள் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டோம். ஆனால் இந்த தேர்தலிலும் அப்படி இருக்க முடியாது. கண்டிப்பாக கூடுதல் தொகுதிகள் வேண்டும். இதை ஒதுக்க வேண்டிய கடமை திமுகவுக்கு இருக்கிறது என்றார்.

இதேபோன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் கூடுதல் தொகுதி வேண்டும் என்று கேட்டுள்ளார். இந்நிலையில் கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சண்முகத்திடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் கூறியதாவது, எங்களுடைய முதல் கடமை அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை தோற்கடிப்பது தான். எனவே 2026 ஆம் ஆண்டு தேர்தலை திமுக தலைமையிலான கூட்டணியில் சந்திக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினார். மேலும் இதன் மூலம் கூடுதல் தொகுதிகளை கேட்டாலும் திமுக கூட்டணியில் தான் சிபிஎம் தொடரும் என சண்முகம் உறுதிப்படுத்தியுள்ளார்.