அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 19 வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிபதி எஸ். அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன் மூலம் நீதிமன்ற காவல் 19-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.