காஞ்சிபுரம் மாவட்ட வடக்கு திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு படகு போட்டிகள் நடைபெற்றது. இந்த படகு போட்டிக்கு அமைச்சர் த.மோ அன்பரசன் தலைமை தாங்கினார். இந்த படகு போட்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 23 மீனவ குப்பங்களில் இருந்து தலா 2 படகுகள் வீதம் 46 படகுகள் கலந்து கொண்டது. இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி பரிசுகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து விழாவில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதாவது, அதிமுகவில் தற்போது யார் தலைவர் என்பது தெரியவில்லை. எடப்பாடி யாருக்கும் விசுவாசமாக இல்லை. அவர் பாஜகவின் அலுவலகத்தில் நின்று காத்துக் கொண்டிருக்கிறார். பாஜக ஒரு கட்சியே கிடையாது. அது ஒரு ஆடியோ வீடியோ கட்சி. கட்சிக்காரர்களை வேவு பார்த்து வீடியோ எடுத்து ஆடியோ பதிவு வெளியிட்டு மிரட்டும் கம்பெனி. கடந்த தேர்தலில் ஆதரித்தது போல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும். மேலும் திமுக தலைமையில் மத சார்பற்ற கூட்டணி அமைய மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று கூறினார்.