வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களின் விலையை ரூ 200 குறைத்து உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு. அந்த 200 ரூபாயை மானியத் தொகையாக எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கவுள்ளது. இதனால் தற்போது ரூ 1,118க்கு விற்கப்படும் சிலிண்டர் விலை 900 வரை குறையும். ஏற்கனவே உஜ்வாலா சிலிண்டர் பயனர்களுக்கு 200 குறைக்கப்பட்டுள்ளதால் பொது அறிவிப்போடு சேர்த்து அவர்களுக்கு மொத்தம் 400 குறைக்கப்படுகிறது.

அதாவது, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூபாய் 200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கூடுதலாக மானியம் வழங்கப்படுவதன் மூலம் உஜ்வாலா திட்டத்தில் எரிவாயு சிலிண்டருக்கு ரூபாய் 200 குறையும்.

மேலும் சந்திராயன் 3 திட்டம் வெறும் வெற்றி அல்ல, தேசத்தின் முன்னேற்றத்திற்கான அடையாளம் என அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சந்திராயன் 3 திட்டத்தின் வெற்றிக்காக பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

“பிரதமர் மோடி வீட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் 200 ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளார், அனைத்து பயனர்களுக்கும்… இது ரக்ஷா பந்தன் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு பெண்களுக்கு அளித்த பரிசு” என்று மத்திய அமைச்சர் அனுராக் தெரிவித்துள்ளார்.