ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் கிரிக்கெட் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில், ஆல்-ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ் வீச முயன்ற பந்து கையில் இருந்து நழுவி ஆடுகளத்தில் உருண்டோடியது வீரர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

 

இதற்கிடையே அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் பிக் பேஷ் லீக் போட்டியில், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி வெற்றி பெற 13 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் மழையால் போட்டி கைவிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய அடிலெய்டு அணி 45 ரன்கள் எடுத்த நிலையில், சிட்னி தண்டர் அணி 2.5 ஓவர்களில் 43 ரன்கள் எடுத்திருந்த போது நடுவர்கள் போட்டியை நிறுத்தியது அந்த அணியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மழை குறைவாக இருந்த போதே நடுவர்கள் இந்த முடிவை எடுத்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், இது ஒரு துரதிர்ஷ்டவசமான முடிவு என வர்ணனையாளர்களும் விமர்சித்துள்ளனர்.