மார்ச்சு 9 கிரிகோரியன் ஆண்டின் 68 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 69 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 297 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 141 – லியூ சே சீனாவின் ஆன் வம்சப் பேரரசராக முடிசூடினார்.

1009 – லித்துவேனியா பற்றிய முதலாவது வரலாற்றுப் பதிவு குவெட்லின்பர்க் மதப்பள்ளியின் ஆண்டுக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது.

1226 – சுல்தான் யலால் அத்-தின் சார்சியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றினார்.

1500 – பெத்ரோ கப்ராலின் கடற்படையினர் லிசுபனில் இருந்து கிழக்கிந்தியத் தீவுகள் நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் பின்னர் பிரேசிலைக் கண்டுபிடித்தனர்.

1566 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் செயலாளர் டேவிட் ரிசியோ எடின்பரோவின் அரண்மனை ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார்.

1796 – நெப்போலியன் பொனபார்ட் தனது முதலாவது மனைவி யோசபினைத் திருமணம் புரிந்தார்.

1815 – மின்கலத்தால் இயக்கப்படும் மணிக்கூடு பற்றி முதன்முதலாக ஆங்கிலேயப் பொறியியலாளர் பிரான்சிசு ரொனால்ட்சு எழுதினார்.

1841 – தாம் கொண்டுவரப்பட்ட கப்பலைக் கைப்பற்றி வைத்திருந்த ஆப்பிரிக்கர்கள் சட்ட விரோதமாக அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.[1]

1842 – கலிபோர்னியா தங்க வேட்டைக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாளில் கலிபோர்னியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்கொட் தலைமையில் மெக்சிக்கோவைத் தாக்கின.

1896 – ஆத்வா நகர சமரில் இத்தாலி தோல்வியடைந்ததை அடுத்து, இத்தாலியின் பிரதமர் பிரான்சிசுக்கோ கிருசுப்பி பதவி துறந்தார்.

1916 – மெக்சிக்கோ புரட்சி: ஏறத்தாழ 500 மெக்சிக்கர்கள் எல்லை நகரான நியூ மெக்சிக்கோவின் கொலம்பசு நகரைத் தாக்கினர்.

1923 – விளாதிமிர் லெனினுக்கு மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: இடச்சு கிழக்கிந்திய இராணுவம் மேற்கு சாவகத்தில் நிபந்தனை எதுவுமின்றி சப்பானியப் படைகளிடம் சரணடைந்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படைகள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஐந்து-நாள் சமரைத் தொடங்கின.

1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவ வானூர்திகள் எசுத்தோனியா தலைநகர் தாலினைத் தாக்கின.

1945 – இரண்டாம் உலகப் போர்: இந்தோ சீனாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சப்பானியப் படையினர் பிரான்சியரை ஆட்சியில் இருந்து அகற்றியது.

1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீச்சூறாவளியினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.

1946 – இங்கிலாந்து, போல்ட்டன் நகரில் விளையாட்டரங்கில் இடம்பெற்ற நெரிசலில் 33 பேர் உயிரிழந்தனர்.

1956 – நிக்கித்தா குருசேவின் ஸ்டாலினுக்கு எதிரான கொள்கைக்கு எதிராக ஜோர்ஜியாவில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.

1957 – அலாஸ்காவில் அலூசியன் தீவுகளில் ஏற்பட்ட 8.6 அளவு நிலநடுக்கத்தில் பலத்த சேதமும் ஆழிப் பேரலையும் ஏற்பட்டது.

1959 – பார்பி பொம்மை நியூ யோர்க் நகரில் அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியில் முதன் முதலாகக் காட்சிக்கு வைக்கப்பட்டது.

1960 – பெல்டிங் இபார்ட் இசுக்ரிப்னர் என்பவர் தான் கண்டுபிடித்த இடைக்கடத்தி ஒன்றை நோயாளி ஒருவருக்குப் பொருத்தினார். இவ்விடைக்கடத்தி அந்நோயாளி முறையாக இரத்தத்தூய்மிப்புப் பெற அனுமதிக்கிறது.

1961 – சோவியத்தின் ஸ்புட்னிக் 9 விண்கலம் இவான் இவானொவிச் என்ற மனிதப் போலியை வெற்றிகரமாக விண்வெளிக்குக் கொண்டு சென்றது. இதன் மூலம் சோவியத் ஒன்றியம் மனித விண்வெளிப்பறப்புக்கு தயாரென அறிவித்தது.

1967 – அமெரிக்காவின் இரு விமானங்கள் ஒகையோ மாநிலத்தில் வானில் மோதிக் கொண்டதில் 26 பேர் உயிரிழந்தனர்.

1976 – இத்தாலியின் டிறெண்டோ என்ற இடத்தில் ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்த கம்பிவட ஊர்தி கீழே விழுந்ததில் 15 சிறுவர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்தனர்.

1977 – இசுலாமியத் தீவிரவாதிகள் வாசிங்டன், டி. சி.யில் மூன்று கட்டிடங்களை 39-மணிநேரம் கைப்பற்றி வைத்திருந்ததில் 2 பேர் கொல்லப்பட்டு, 149 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

1986 – சலேஞ்சர் விண்ணோடத்தின் அழிந்த சிதைவுகளை ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்கடலோடிகள் கண்டுபிடித்தனர். இறந்த ஏழு விண்வெளி வீரர்களினதும் உடல்கள் உள்ளே இருந்தன.

1997 – சீனா, மங்கோலியா, கிழக்கு சைபீரிய வானியலாளர்கள் பகல் நேரத்தில் ஏல்-பாப் வால்வெள்ளியைக் கண்ணுற்றனர்.

2006 – சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.

2011 – டிஸ்கவரி விண்ணோடம் தனது 39-வதும், கடைசியுமான பயணத்தை முடித்து பூமி திரும்பியது.

2012 – காசாக்கரையில் இருந்து 130 ஏவுகணைகள் இசுரேல் நோக்கி ஏவப்பட்டன.

இன்றைய தின பிறப்புகள்

1454 – அமெரிகோ வெஸ்புச்சி, இத்தாலிய நிலப்படவரைஞர், நாடுகாண் பயணி (இ. 1512)

1564 – டேவிட் பாப்ரிசியசு, செருமானிய மதகுரு, வானியலாளர் (இ. 1617)

1568 – அலோசியுஸ் கொன்சாகா, இத்தாலியப் புனிதர் (இ. 1591)

1818 – செயிண்ட் கிளெயர் டிவில்லி, பிரான்சிய வேதியியலாளர் (இ. 1881)

1928 – மார்ட்டின் க்ராம்பன், செருமானிய குறியீட்டியல் வல்லுநர் (இ. 2015)

1928 – செ. கணேசலிங்கன், ஈழத்து இடதுசாரி எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 2021)

1929 – சில்லூர் இரகுமான், வங்காளதேசத்தின் 19வது குடியரசுத் தலைவர் (இ. 2013)

1931 – கரண் சிங், இந்திய அரசியல்வாதி

1934 – யூரி ககாரின், உருசிய விண்வெளி வீரர் (இ. 1968)

1943 – பாபி பிசர், அமெரிக்க சதுரங்க வீரர் (இ. 2008)

1951 – சாகீர் உசைன், இந்திய தபேலா இசைக்கலைஞர்

1954 – டி. எல். மகராஜன், தமிழகத் திரைப்பட பின்னணிப் பாடகர்

1954 – பொபி சான்ட்ஸ், ஐரியக் குடியரசுப் படைத் தன்னார்வலர் (இ. 1981)

1956 – சசி தரூர், இந்திய அரசியல்வாதி

1957 – பி.சீ மையேர்சு, அமெரிக்க உயிரியலாளர்

1959 – தக்காக்கி கஜித்தா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர்

1970 – நவீன் ஜின்டால், இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி

1974 – ஜோஷ்வா ஸ்ரீதர், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்

1979 – ஆஸ்கர் ஐசக், குவாத்தமாலா-அமெரிக்க நடிகர்

1985 – பார்தீவ் பட்டேல், இந்தியத் துடுப்பாளர்

இன்றைய தின இறப்புகள்

1825 – அன்னா லெத்திசியா பார்பௌல்டு, ஆங்கிலேயக் கவிஞர், நூலாசிரியர் (பி. 1743)

1847 – மேரி அன்னிங், ஆங்கிலேயத் தொல்லுயிரியாளர் (பி. 1799)

1851 – ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட், தென்மார்க்கு இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1777)

1857 – தோமினிக் சாவியோ, இத்தாலியப் புனிதர் (பி. 1842)

1926 – மிக்கோ உசுயி, ரெய்கி பயிற்சி முறையை உருவாக்கிய சப்பானிய ஆன்மிகத் தலைவர் (பி. 1865)

1936 – யுக்தேஷ்வர் கிரி, இந்திய யோகி (பி. 1855)

1941 – ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன், பிரித்தானிய மொழியியலாளர் (பி. 1851)

1952 – அலெக்சாண்டிரா கொலோண்டை, உருசியப் பெண் புரட்சியாளர் (பி. 1872)

1970 – எஸ். இராமநாதன், தமிழக பெரியாரியக்க செயற்பாட்டாளர் (பி. 1895)

1988 – எம். பி. ஸ்ரீனிவாசன், தென்னிந்திய இசையமைப்பாளர் (பி. 1925)

1992 – மெனசெம் பெகின், இசுரேலின் 6வது பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1913)

1994 – தேவிகா ராணி, இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1908)

1997 – நொடோரியஸ் பி.ஐ.ஜி, அமெரிக்க ராப் கலைஞர் (பி. 1972)

2003 – வீ. ப. கா. சுந்தரம், தமிழிசைக் கலைக்களஞ்சியம் தொகுத்தவர் (பி. 1915)

2005 – எம். பழனியாண்டி, இந்திய அரசியல்வாதி (பி. 1918)

இன்றைய தின சிறப்பு நாள்

ஆசிரியர் நாள் (லெபனான்)