கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்து முடித்து, பதிவு செய்து வேலை கிடைக்காமல் 5 வருடங்களுக்கும் மேலாக இளைஞர்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாய், பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் வீதம் 3 ஆண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதேபோல் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி தொகை 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு 600 ரூபாய், மேல்நிலைக்கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 750 ரூபாய், பட்டதாரிகளுக்கு 1000ரூபாய் வீதம் 10 ஆண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கல்வி தகுதிகளை பதிவு செய்து 31.3.2023 உடன் 5 ஆண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரர்கள், 1 ஆண்டு முடிவுற்ற மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள். இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவி, மாணவராக இருக்க கூடாது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயதிற்கு மிகவும் இருப்பது அவசியம்.

குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மனுதாரர் தனியார் அல்லது அரசு நிறுவனங்களின் வாயிலாக நிதி உதவித்தொகை பெறுபவராக இருக்கக் கூடாது. முக்கியமாக உதவித்தொகை பெறும் காலங்களில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து பார்த்து பயன்பெறலாம் என கூறியுள்ளார்.