ஜாரிகண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் காட்டு யானைக் கூட்டத்துடன் செல்ஃபி மற்றும் வீடியோ எடுக்க முயன்ற 32 வயது வாலிபர் ஒருவர், யானைகளால் மிதிக்கப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கேட்லா கிராமத்தைச் சேர்ந்த அமித் குமார் ராஜ்வார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சுமார் 8 காட்டு யானைகள் கொண்ட கூட்டத்தின் அருகே அவர் சென்றபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

அந்தப் பகுதியில் போதியப் பாதுகாப்பிற்காக வனத்துறை சார்பில் ஒலிபெருக்கிகள் மூலம் தொடர்ந்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும், மக்கள் அதை மதிக்காமல் யானைகளின் அருகே செல்வதாலேயே இத்தகைய விபத்துக்கள் ஏற்படுவதாக வன அதிகாரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தற்போது பொகாரோ மற்றும் ராம்கர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் 42 யானைகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சுற்றித் திரிவதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.