திருப்பூர் தாராபுரம் தாலுகாவிலுள்ள குந்தடம் பஞ்சாயத்து யூனியனில் அம்மா சிமெண்ட் விநியோக திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட கோரி பாஜக நிர்வாகியும், கொலுமங்குழி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் யோகேஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்து உள்ளார். அதில், அம்மா சிமெண்ட் கிட்டங்கியில் ஆவணங்களின் படி இருக்கவேண்டிய சிமெண்ட் மூட்டைகளை விட குறைவான எண்ணிக்கையில் இருப்பதாக புகாரளித்தேன். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தணிக்கை பிரிவு உதவி இயக்குனர் ஆய்வில் இது உறுதிசெய்யப்பட்டது.

மேலும் இந்த ஆய்வுக்கு பிறகு பயனாளிகள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து சிமெண்ட் மூட்டைகளுக்குரிய தொகையை தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனம் செலுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதன்படி 4,217 சிமெண்ட் மூட்டைகள் விநியோகத்தில் முறைகேடுகள் நடந்து உள்ளது. இதற்கிடையில் முறைகேடு குறித்து அம்மா சிமெண்ட் கிட்டங்கியை நிர்வகிக்கும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு எதிராக மட்டும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளதாகவும், முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எந்த வழக்கும் பதியப்படவில்லை என்றும் கூறியுள்ளார். ஆகவே இந்த முறைகேடு வழக்கை விசாரிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும். அதுமட்டுமின்றி முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாகவும், குந்தடம் வட்டார வளர்ச்சி அதிகாரி உட்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாகவும் அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. எனவே விசாரணைக்கு பின்பே சம்பந்தப்பட்ட பிற அதிகாரிகள் வழக்கில் சேர்க்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அம்மா சிமெண்ட் விநியோக திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான விசாரணை பற்றி 3 வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.