தமிழகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஜனவரி 26-ம் தேதி அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும். அந்த வகையில் அனைத்து  மாவட்டத்திலும் உள்ள  ஊராட்சிகளிலும் ஜனவரி 26-ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, ஜனவரி 26-ம் தேதி காலை 11 மணியளவில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தின் போது கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், திட்ட பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போன்றவைகள் குறித்து விவாதிக்கப்படும்.

அதன் பிறகு தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயிர்கல்வி உறுதி திட்டம் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்படும். மேலும் கிராம நிர்வாக அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வைப்பதோடு பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக பிளக்ஸ் பேனரிலும் வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.